தமிழகத்தில் அண்ணனின் காதலை தங்கை பெற்றோரிடம் காட்டிக் கொடுத்ததால் குடும்பமே கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(27). இவருக்கு சுகன்யா(24) என்ற தங்கையும், மோகன்(55), ராஜேஸ்வரி(43) என்ற பெற்றோரும் உள்ளனர்.
இந்நிலையில் தமிழரசன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு அவருக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
அதைத் தொடர்ந்து தன்னுடைய காதலிக்கு அவசர தேவைக்காக சுமார் 2 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார். இவர்களின் காதல் சுகன்யாவுக்கு தெரியவர, உடனடியாக அவர் தன்னுடைய பெற்றோரிடம் அவர் காதலிப்பதையும் மற்றும் ரொக்கமாக 2 லட்சம் ரூபாயும் கொடுத்ததையும் கூறியுள்ளார்.
இதை அறிந்த அவர்களின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளான அவர் தன்னுடைய காதலை வீட்டில் காட்டிக் கொடுத்த தங்கை மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இதனால் சம்பவ தினத்தன்று அவரது தந்தை இரவு வேலைக்காக வெளியில் சென்றுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட தமிழரசன் வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் தங்கையை வீட்டில் இருந்த கத்தியைப் பயன்படுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி மறு நாள் காலையில் வீட்டிற்கு வந்த தந்தையும் கொலை செய்துள்ளார்.
இது வெளியில் தெரிந்தால் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்த தமிழரசன், தன்னுடைய மார்பில் கத்தியை வைத்து தாக்கிக் கொண்டு, முகமுடி அணிந்து வந்த நபர்கள் சிலர் தாக்கிச் சென்றுவிட்டதாக பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.
சந்தேகமடைந்த பொலிசார் இவரிடம் நடத்திய கிடுக்கிப் பிடி விசாரணையில் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து பொலிசார் தமிழரசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






