முதல் சினிமா வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த ஆண்டு இந்திய சினிமா நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னையில், சினிமா நூற்றாண்டு விழாவை 4 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.
வருகிற 21ம் திகதி முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைக்கிறார். நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
இந்திய சினிமா நூற்றாண்டு விழா செப்டம்பர் 21ம் திகதியில் இருந்து 24ம் திகதி வரை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பொறுப்பேற்று நடத்துகிறது.
செப்டம்பர் 21ம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து, விழாவுக்கு தலைமை தாங்குகிறார். தொடர்ந்து 22ம் திகதி காலை கன்னட சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும், அன்று மாலை தெலுங்கு சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும், 23ம் திகதி காலை மலையாள சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
அனைத்து இந்திய சினிமா உலகினரும் பங்கு பெறும் நிறைவு நாள் உச்சகட்ட நிகழ்ச்சி 24ம் திகதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். கவுரவ விருந்தினராக தமிழக கவர்னர் கே.ரோசய்யா பங்கேற்கிறார்.
விழாவுக்கு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல் மந்திரி கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா, கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து பல அமைச்சர்களும் நடிகர், நடிகைகளும் கலந்து கொள்வார்கள்.
நிறைவு நாள் உச்சக்கட்ட நிகழ்ச்சியில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். அவருடன் வட இந்திய நடிகர்-நடிகைகள் பலரும் பங்கேற்கிறார்கள்.
சினிமா நூற்றாண்டு விழாவின் முன் நிகழ்வுகளாக சென்னை நகரத்தில் பொது பூங்காக்களை ஒலி-ஒளியினால் அலங்கரித்து, அதில் சினிமா கலை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். பழைய சினிமா படங்களும் திரையிடப்படும். சென்னை கடற்கரையிலும் பழைய சினிமா படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும்.
சென்னை சத்யம், அபிராமி ஆகிய திரையரங்குகளில் வருகிற 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை பொதுமக்களுக்கு பழைய சினிமா படங்கள் இலவசமாக காட்டப்பட இருக்கிறது. சென்னை நகரமே விழாக்கோலம் பூணும்படி நகரை சிறப்பாக அலங்கரிக்க இருக்கிறோம்.
தென்னிந்திய சினிமா சங்கங்கள் குறிப்பாக தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கத்தினர் அனைவரும் உரிய பங்களிப்பை அளிக்க முன்வந்து இருக்கிறார்கள்.
18ம் திகதி முதல் 24ம் திகதி வரை தமிழ்நாட்டில் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற ஆதரவும், முழு ஒத்துழைப்பும் கொடுத்து, தாய் அன்போடு உதவும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கல்யாண் கூறினார்.
பேட்டியின்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் கேயார், துணைத்தலைவர்கள் டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ், செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.