ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் செல்பிக்கு போஸ் கொடுத்து சிக்கலில் மாட்டிய கருணாஸ்!!

217

karunas

நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடனை தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். முதன்முதலாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாஸ், சட்டசபையில் ஜெயலலிதாவை புகழ்ந்துப் பாடி, அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் இடம்பெற்றது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்ததாக வெளிவந்த செய்திக்குப் பின்னர், ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. தமிழகம் மட்டுமில்லாது உலகம் முழுவதிலும் உள்ள அதிமுக தொண்டர்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

குடியரசு தலைவர், பிரதமர், உலக நாடுகளின் தூதர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி தங்களது சோகத்தை பகிர்ந்துகொண்டனர்.

அதன்பின்னர், மாலை 6 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனாவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

அப்போது, அந்த இடத்தில் இருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் அனைவரும் சோகமயத்துடனும், அழுகை கலந்த முகத்துடனும் காணப்பட்டனர்.

ஆனால், இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட கருணாஸ், ரசிகர் ஒருவருடன் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட கருணாஸ், உணர்ச்சிபூர்வமான அந்த இடத்தில் இதுபோல் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளது பலரின் கண்டனத்திற்கும் ஆளாக்கியுள்ளது.