ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்வதற்காக வவுனியாவுக்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று வவுனியா தவசிகுளத்திலும் அதன் பின்னர் மதகுவைத்தகுளத்திலும் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,
அபிவிருத்தி பற்றி பெரிய அளவில் பேசுகின்ற அரசாங்கம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காண முன்வரவில்லை என குற்றம் சாட்டியிருக்கின்றார்.
அரச தரப்பினர் தமது சொந்தப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காகவே, வீதிகளை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியே முன்னின்று பாடுபட்டது என குறிப்பிட்டதுடன், ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று சர்வதேசம் உட்பட பலரும் நம்புகின்றார்கள்.
எனவே இந்தத் தேர்தலில் வடக்கு மக்கள் தமது கட்சியையே ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐ.தே.க பிரமுகர்கள் அசாத் சாலி, ரவி கருணாநாயக்க ஆகியோருடன் ஐ.தே.க வவுனியா மாவட்ட வேட்பாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.








