உடல்நிலை பாதிப்பு – மண்டேலா மீண்டும் மருத்துவமனையில்…

469

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மீண்டும் நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட அவர் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

94 வயதாகும் மண்டேலாவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும், அவரது உடல்நிலை மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப்படக்கூடிய அளவில்தான் இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் பிரெடோரியாவிலுள்ள பெயர் அறிவிக்கப்படாத மருத்துவமனை ஒன்றில் மண்டேலா சேர்க்கப்பட்டுள்ளார்.

மண்டேலாவை குணப்படுத்தவும், அவருக்கு கஷ்டத்தைக் குறைக்கவும் மருத்துவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துவருவதாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இனவெறி ஆட்சியை எதிர்த்து போராடிய மண்டேலா சிறையில் இருந்த இருபத்து ஏழு ஆண்டு காலத்தில் அவருக்கு காசநோய் ஏற்பட்டிருந்தது.

வெள்ளையின சிறுபான்மையினரின் இனவெறி ஆட்சியிலிருந்து தென்னாப்பிரிக்கா ஜனநாயகப் பாதைக்கு திரும்பியபோது அதன் தலைவராக இருந்த மண்டேலா தென்னாப்பிரிக்காவின் தேசத் தந்தையாக மதிக்கப்படுகிறார்.