ஆசை மகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக மகளைக் கொன்று தந்தை தற்கொலை!!

539

suicide hanging

சென்னையில் சொந்த மகளை கழுத்தை நெரித்துக் கொன்று தந்தை தானும் தற்கொலை செய்து கொண்lடுள்ளார். மேலும் தற்கொலைக்கான காரணத்தை உருக்கமான கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுப்பிரமணி (46). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுஜாதா, 10 வயது மகனுடன் வானகரத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு நேற்று புறப்பட்டு சென்றார். மகள் ஷர்மிளாவும் (16) சுப்பிரமணியும் மட்டும் வீட்டில் இருந்தனர்.

இரவு 10 மணி அளவில் சுஜாதா மகனுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷர்மிளா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். சுப்பிரமணி அறையில் தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்த சுஜாதா கதறி அழுதார்.

அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி பொலிசார் விரைந்து வந்து இருவரது உடலையும் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பொலிஸ் விசாரணையில் கடன் தொல்லை காரணமாக ஷர்மிளாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

நேற்று மாலை 4 மணி அளவில் சுஜாதா வீட்டில் உள்ள கையடக்க தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அப்போது ஷர்மிளா பேசியிருக்கிறாள். பின்னர் இரவு 8.30 மணி அளவில் மீண்டும் சுஜாதா போன் செய்த போது கையடக்க தொலைபேசி செயற்படவில்லை. எனவே 8 மணி அளவில்தான் சுப்பிரமணி மகளை கொன்று விட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த துயர முடிவை எடுப்பதற்கு முன்னர் அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை பொலிசார் கைப்பற்றினர்.
அதில் அதிக கடன் இருப்பதால் இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் எனவே தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றதாகவும் சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.

நான் இறந்த பின்னர் ஆசையாய் வளர்த்த மகள் கஷ்டப்படக்கூடாது என்பதால் அவளையும் கொலை செய்து விட்டேன் என்றும் அவர் கடிதத்தில் எழுதி உள்ளார்.