இறந்துபோன சடலத்துடன் இரவு முழுவதும் சுற்றித்திரிந்த நபர் : அதிர்ச்சியளிக்கும் காரணம்!!

264

மூதாட்டியின் உடலை தகனம் செய்ய இடம் கிடைக்காமலும் எவரும் உதவி செய்யாத காரணத்தினாலும் உடலை தள்ளுவண்டியில் வைத்து கொண்டு இரவு முழுவதும் பேரன் அலைந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருச்சி, லால்குடியை அடுத்த நெருஞ்சக்குடிக்கு அருகில் உள்ள பள்ளிவயல் சுடுகாட்டு பகுதியில் ஒருவர், கரும்பு சருகளை போட்டு தீ மூட்டிக்கொண்டிருந்தார்.

அருகில் தள்ளுவண்டியும் இருந்துள்ளது. இதனால், சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்த போது உடலை சருகளை கொண்டு தீயிட்டு கொளுத்திக்கொண்டிருந்தார்.

அதிர்ச்சியடைந்த மக்கள் சம்பவம் பற்றி போலிசாருக்கு அறிவித்தனர். அங்கு சென்ற பொலிசார் நபரை போலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் நாகை மாவட்டம் வேனாங்கண்ணியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் என தெரியவந்துள்ளது.

தனது பாட்டி திடீரென இறந்து விட்டதாகவும் உடலை அடக்கம் செய்ய இடம் கொடுக்காததாலும் எவரும் உதவாத காரணத்தினாலும் கரும்பு சருகளை போட்டு எரித்ததாக நபர் கூறியுள்ளார்.

சுனாமியில் பெற்றோரை இழந்த இந்த வாலிபர், ஊர் ஊராக சென்று பழைய பத்திரிகைகள், பாட்டில்களை சேகரித்து விற்கும் தொழில் செய்து வருகிறார்.

பெற்றோர் இறந்த பின்னர், தாய் வழி பாட்டியான மேரியம்மாளுடன் வசித்து வரும் இந்த வாலிபர் அண்மை காலமாக லால்குடி அருகில் உள்ள நெடுஞ்சலக்குடி ஊராட்சி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

தனது பாட்டி நேற்று இறந்து விட்டதாகவும் அவரை அடக்கம் செய்ய கிருஸ்தவ தேவாலயமும் அக்கம் இருந்தவர்களும் உதவ மறுத்து விட்டால், தானே இரவு முழுவதும் இடம் தேடி அலைந்து, ஓரிடத்தில் பாட்டியின் உடலை கரும்பு சருகள், பனை மட்டைகளை கொண்டும் எரித்ததாக மாரியப்பன் கூறியுள்ளார்.

இதனையடுத்து பாதி எரிந்த நிலையில் காணப்பட்ட உடலை பொலிசார் முழுமையாக எரித்துள்ளனர்.

பாட்டியின் உடலை அடக்கம் செய்யவும், தகனம் செய்யவும் இடம் கிடைக்காமல் தள்ளுவண்டியில் உடலை வைத்துக்கொண்டு பேரன் அலைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் மனைவியின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவ ஊர்தி வழங்கப்படாத காரணத்தினால், உடலை 12 கிலோ மீற்றர் தூரம் சுமந்து சென்ற துயரம் மறையாத நிலையில், தமிழகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.