பிரசவ வலியில் துடித்த பெண் : மனிதாபிமானம் காட்ட மறுத்த மற்றொரு பெண்!!(காணொளி)

405

பிரசவ வலியில் துடிக்கும் பெண் மீது மனிதாபிமானம் காட்ட மறுத்த மற்றொரு பெண்ணின் அடாவடித்தனமான காணொளி இணையத்தில் பகிரப்பட்டும், கண்டிக்கப்பட்டும் வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத் நகரைச் சேர்ந்த ஒருவர், பிரசவ வலியில் துடிக்கும் தனது மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார். அவர் செலுத்திச் சென்ற கார் தவறுதலாக ‘ஓடி’ (Audi) கார் ஒன்றுடன் மோதியது. இதில், ஓடி காரின் முன்புறம் சற்றே நெளிந்தது.

ஓடி காரைச் செலுத்திச் சென்ற பெண், விபத்தை ஏற்படுத்திய காரின் சாவியைப் பிடுங்கியபின் கார் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.

காரினுள் கர்ப்பிணியான தனது மனைவி இருப்பதாகவும் அவர் பிரசவ வலியால் துடிப்பதாகவும் விபத்தை ஏற்படுத்தியவர் தெரிவித்தார். அது உண்மைதான் என்று அறிந்தபோதும் அந்தப் பெண் மசியவில்லை. சமாதானம் ஏற்படுத்த முயன்ற பொலிஸாருக்கும் அந்தப் பணக்காரப் பெண் செவிசாய்க்கவில்லை.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பகுதி மக்கள், அந்தப் பணக்காரப் பெண் மீது கடும் கோபம் கொண்டனர். ‘சாவியைத் தருகிறாயா, இல்லையா?’ என்று அவர்கள் அந்த ‘ஓடி’ பெண்ணை அச்சுறுத்தவே, வேறு வழியின்றி சாவியைத் தூரமாகத் தூக்கி எறிந்துவிட்டு, காரில் ஏறித் தப்பிச் சென்றார்.

இந்தக் காட்சி இணையத்தில் பரவி வருவதுடன், பலரது கண்டனங்களையும் குவித்து வருகிறது.