7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை : குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை?

305

காஞ்சிபுரத்தில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஹாசினி என்ற சிறுமி 2 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த தஷ்வந்த்(23) என்ற மென்பொறியாளர், ஹாசினியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றதும், அச்சிறுமி சத்தம்போட்டு கத்தியதால் போர்வையால் அந்த சிறுமியை சுற்றியுள்ளார். இதில் அச்சிறுமி மூச்சடைத்து இறந்துவிட்டதால், அவரது உடலை பற்றைக்குள் வீசி தீவைத்து எரித்துள்ளார்.

இதையடுத்து தஷ்வந்தை பொலிசார் கைது செய்தனர். அவர் மீது கொலை, பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் சிறுமியை கொலை செய்த தஷ்வந்துக்கு பிணை வழங்கக்கூடாது. அவருக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் கோர்ட்டில் ஆஜராகக்கூடாது.

அதிகபட்ச தண்டனையாக அவருக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி மதனந்தபுரம் மாதா நகரில் நேற்று 200–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

மேலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்து வைத்தார். அதன் பின்னர் சாலை மறியலை கைவிட்டு பெண்கள் உள்பட அனைவரும் கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிந்து சிறுமி ஹாசினியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் என அனைவரும் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.