பாம்பு ஒன்றை கையில் வைத்திருந்து புகைப்படம் பிடித்துக்கொண்டதால், இந்திய தொலைக்காட்சி நடிகை ஸ்ருதி உல்ஃபட், உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஸ்ருதி உல்ஃபட் மற்றும் நடிகர் பியர்ல் புரி ஆகியோர் பாம்பை கையில் வைத்திருக்கும் வீடியோவும் புகைப்படங்களும் கடந்த ஒக்டோபர் மாதம் வெளியாகின.
அதையடுத்து இவர்கள் இருவரும் பாம்பை துன்புறுத்தியதாக விலங்கு நல ஆர்வலரான சுனீஷ் சுப்ரமணியன் உட்பட சிலர் இந்திய வனத்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தனர்.
இந்நிலையில், தான் கையில் பிடித்து வைத்திருந்த பாம்பு உண்மையான பாம்பு அல்ல என நடிகை நடிகை ஸ்ருதி கூறினார். அதனால் அப் புகைப்படங்களையும் வீடியோவையும் இந்திய வனத்துறை அதிகாரிகள் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில், நடிகை ஸ்ருதியும், நடிகர் பியர்ல் புரியும் உண்மையான நல்ல பாம்பை கையில் பிடித்து வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
நாகார்ஜூனா எனும் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்புக்கு கொண்டு வரப்பட்ட அந்த நல்ல பாம்பை அவர்கள் பிடித்து வைத்திருந்தனர் எனவும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து நடிகை ஸ்ருதி, நடிகர் பியர்புரி மற்றும் அந்த தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்களான உட்கர்ஷ் பாலி, நிதின் சோலங்கி ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். வனத்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.