8 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த மையால் ஓட்டு போட முடியாமல் தவிக்கும் பெண்!!

98

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் வைத்த மை அழியாததால் கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் 2024 பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

இந்நிலையில், கேரளாவில் பெண் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் வைத்த மை அழியாததால் வாக்களிக்க முடியாமல் உள்ளார்.

கேரளாவில் உள்ள சொர்னூர் குளப்புள்ளியை சேர்ந்தவர் உஷா (வயது 62). இவர் கடந்த 2016 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளார்.

அப்போது இவரது இடது கை ஆள்காட்டி விரலில் மை தடவப்பட்டுள்ளது. இந்த மையானது கடந்த 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மறையாமலேயே உள்ளது.

இதனால் பிரச்னை ஏற்படும் என்று நினைத்து 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வாக்களிக்க செல்லாமலேயே இருந்துள்ளார்.

இதற்கு தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் வாக்களிக்க முடியவில்லை.

இதுகுறித்து உஷா கூறும்போது தொடர்ந்து தான் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைவதாக தெரிவித்துள்ளார்.