வவுனியாவில் தமது காணியை தம்மிடம் வழங்கக்கோரி நஞ்சுப் போத்தலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்!!

396

 
தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் இணைந்து விசப் போத்தலுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.நேற்று (04.04.2017) மாலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியில் கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து வசித்து வந்த குடும்பம் ஒன்று நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1991ம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றிருந்தது. அதன்பின் அவர்களது காணியில் உள்ள வீட்டில் ஒரு குடும்பம் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நிலையில் தங்கியிருந்தது.

அவர்களால் குறித்த காணியில் பிறிதொரு வீடும் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த குடும்பம் கிளிநொச்சியில் வசித்து வரும் நிலையில் தமது உறவினர் எனக் கூறி ஒரு குடும்பத்தை குறித்த காணியில் குடியேற்றியுள்ளார்.

இந்நிலையில் இடம்பெயர்ந்து இந்தியா சென்ற காணி உரிமையாளரும் அவரது மகனும் கடந்த 23ம் திகதி வவுனியாவிற்கு வந்த நிலையில் தமது காணிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த காணியில் வசிப்பவர்கள் அது தமது காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறி அவர்களது காணியையும், அவர்களது வீட்டையும் கொடுக்க மறுத்து வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் இருந்து வந்தவரிடம் அவரது காணி தான் என்பதற்கான ஆதாரங்கள் 1976ம் ஆண்டு முதல் உள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் என சென்று தமக்கான நீதி கிடைக்கவில்லையென தெரிவித்து தமது காணி வேண்டும் அல்லது இவ்விடத்திலேயே நஞ்சருந்தி சாவேன் எனத் தெரிவித்து குறித்த காணி உரிமையாளர் தமது காணி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

சுமார் ஒரு மணிநேரம் வரை இந்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது அக்காணிக்கு அயலில் உள்ள மக்களும் அவ்விடத்திற்கு வந்து தாம் இங்கு இருந்த காலத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களே இருந்ததாகவும், அது அவர்களது காணி எனவும் தெரிவித்ததுடன் அருகில் உள்ள காணி உரிமையாளர்களின் காணி ஆவணங்களிலும் குறித்த காணி இந்தியாவில் இருந்து வந்தவர்களது காணியே எனவும் எல்லையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் உள்ள தமிழ் மொழி முறைப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து நஞ்சு மருந்துப் போத்தலைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் இன்றைய தினம் வவுனியா பிரதேச செயலாளர், அரச அதிபர் ஆகியோருடன் பேசி தீர்வைத் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை இடைநிறுத்திய அவர்கள் அயலில் உள்ள வீடு ஒன்றில் தங்கியுள்ளனர்.