வன்னிப் பிராந்திய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நேற்று (09.04.2017) காலை 7.30 மணியளவில் வவுனியா பிரதான பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னி பிராந்தியத்தில் பணியாற்றும் பொலிசாரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 25பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் சுற்றுலாவிற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வன்னி பிராந்தியத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தரம் 5 மாணவர்களை இரணைமடு, கிளிநொச்சி, ஆனையிறவு, நல்லூர், நாகவிகாரை, கோட்டை, போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பார்வையிடுவதற்கு பெற்றோருடன் அழைத்துச் செல்லும் நிகழ்வு இடம்பெற்றது.
சிறப்பு பூஜை வழிபாடுகளின் பின்னர் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் சுற்றுலாவிற்கு இரண்டு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிகழ்வில் வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமார, வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.