விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளருக்கு 15 வருட சிறைத் தண்டணை வழங்க கோரிக்கை!!

1119

USA-tamil

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவருக்கு குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையச் சேர்ந்த கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அமெரிக்க சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக குறித்த நபர் நீதிமன்றில் ஒப்புகொண்டிருந்தார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கான தண்டனையே தற்போது சர்ச்சையில் உள்ளது.

தண்டனைக் காலத்தை குறைக்குமாறு சுரேஸின் சட்டத்தரணிகள் கோரி வருகின்றனர். அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரச சட்டத்தரணிகள் கோரி வருகின்றனர். எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி சுரேஸிற்கான தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

இவர் 2004 செப்டெம்பர் மாதத்திற்கும் 2006 ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளருக்கு விமான கருவிகள், நீர்மூழ்கி, போர்க்கப்பல் வடிவமைப்பு மென்பொருட்கள், இரவுப்பார்வைக் கருவிகள், தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு உதவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பிறந்து கனேடியக் குடியுரிமை பெற்ற இவர் தண்டனைக்காலம் முடிந்த பின்னர் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு நாடு கடத்தப்படுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.