வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு!!

764

 
வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் ராசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வு நேற்று (10.04.2017) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் அமைக்கப்பட்ட 150 வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டிருந்தார்.

சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் 68 வீடுகளும், புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் 82 வீடுகளும் அமைக்கப்பட்டு லைக்கா ஞானம் கிராமம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு வீடு வழங்கும் நிகழ்வில் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா குடும்பத்தாருடன் கலந்து கொண்டு வீடுகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, கே.கே.மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களான ஜேம்ஸ் வேறி, கீத் வாஸ் மலேசிய பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன்,

ஞானம் அறக்கட்டளை நிறுவனமானது இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த 150 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கின்றார்கள். நாட்டிலுள்ள தேசியப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட்டு ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அந்த அரசியல் சாசனத்தினூடாக நாங்களும் சமமாக ஒற்றுமையாக சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்று இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு அந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறோம் .

கடந்த 80 வருடங்களாக மக்கள் ஜனநாயக ரீதியாக தேர்தல்களின் மூலமாக மக்கள் அம்முடிவைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அம்முடிவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அந்த கோரிக்கையை தொடர்ந்து எமது மக்கள் வேறு பல கோரிக்கையையும் முன்வைத்து தொடர்ந்து போராட்டிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனைகள், காணிகள் சம்பந்தமான பிரச்சனைகள், மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் சம்பந்தமான பிரச்சனைகள், புனர்வாழ்வு, தொழில் வாய்ப்பு, போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் அத்துடன் இப்பிரச்சனைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட வேண்டிய தேவையிருக்கின்றது.

புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் ஒரு பெரும் பங்களிப்பை செய்தார்கள், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் பாரியதாக இருந்தது. ஆனால் அரசாங்கத்தின் போக்கானது அவர்களுடைய கொள்கைகளைப் பொறுத்தவரையில் அவர்களுடைய பழைய அரசாங்கத்திற்கும் புதிய அரசாங்கத்திற்குமிடையில் ஒரு மாற்றத்தை காண்கிறோம்.

ஆனால் எமது மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும், காணாமல் போனோர் சம்பந்தமாக ஒரு முடிவு விரைவில் கிடைக்கவேண்டும். அரசாங்கம் துரிதமாக செயற்படவேண்டும் எனபது அத்தியாவசியமாக இருக்கின்றது. அது அவர்களின் கடமை.

அரசாங்கம் பதவி ஏற்று இரண்டு வருடகாலமாகிவிட்டது. மக்களுடைய காணிகள் மக்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். இராணுவம் மக்களுடைய காணியில் விவசாயம் செய்து அதில் வியாபாரம் செய்து தொழில்செய்து உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். எமது மக்கள் நலன்புரி நிலையங்களிலும் முகாம்களிலும் இன்ணொருவர் வீடுகளிலும் அவர்களின் தயவில் தங்கி வாழ முடியாது எனக் குறிப்பிட்டார்.