வவுனியாவில் அனாதரவாக வீதியோரத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள் மீட்பு!!

460

வவுனியா – யாழ். பிரதான வீதியில் வீதியோரத்தில் ஆனாதரவான நிலையிலிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிசாரால் நேற்றிரவு மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா- யாழ். பிரதான வீதியோரத்தில் நிலத்தில் சரிந்து விழுந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், ஹெல்மட், ஒரு சோடி பாட்டா என்பனவும் 3 மணித்தியாலத்திற்கும் மேலாக அவ்விடத்தில் காணப்பட்டுள்ளன.

அப்பகுதியில் செய்தி சேகரிப்புக்காக சென்றிருந்த ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விபத்து ஏதாவது நடந்திருக்கலாம் என்னும் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அப்பகுதியில் இருந்து விபத்துக்குள்ளாகி எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த மோட்டார் சைக்கிள், ஹெல்மட் என்பன வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது எவ்வாறு அவ்விடத்தில் வந்தது என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.