வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் இன்று (17.04.2017) காலை 8.30 மணிக்கு கிணற்றில் வீழ்ந்து கிடந்த இரண்டு யானைகள் மீட்கப்பட்டன.
நேற்றைய தினம் (16.04) இரண்டு குட்டி யானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்திருந்த நிலையில் ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வன விலங்கு ஜீவரசிகள் அதிகாரிகளுக்கு தகவலை வழங்கினார்கள்.
ஆனால் மாலை 4 மணியாகியும் வன விலங்கு ஜீவராசிகள் அதிகாரிகள் சமூகமளிக்காமையினால் பொதுமக்களின் உதவியுடன் ஒமந்தை பொலிஸார் சுமார் 5 மணித்தியாளங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளை மீட்டெடுத்தனர்.
எனினும் இரவில் தொடர்ச்சியாக மீட்புப் பணியினை தொடர முடியாமையினால் இன்று காலை இரு பெரிய யானைகளும் கிணற்றினுள் உயிருக்கு போராடிய நிலையில் பெக்கோ கனகரக வாகனத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது.
மீட்க்கப்பட்ட யானைகளில் ஒன்று பெக்கோ கனகரக வாகனத்தை தாக்கியதுடன் அதில் இருந்தவர்களை தாக்க முற்பட்ட சமயம் வனத்துறை அதிகாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டது.
மற்றையா யானை கடும் போராட்டத்தின் மத்தியில் மீட்க்கப்பட்டு காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டது.