வவுனியாவில் கடையடைப்பு பற்றி தீர்மானிக்கவில்லை : வர்த்தக சங்கம் அறிவிப்பு!!

285

எதிர்வரும் 27 ஆம் திகதி வவுனியாவிலும் கதவடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படியானதொரு முடிவை இந்த நிமிடம் வரை வவுனியா வர்த்தக சங்கம் எடுக்கவில்லை என அதன் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீலமீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் இரண்டு மாதங்களை கடக்கின்றன. அந்த மக்களின் போராட்டங்களையும், அவர்களின் உணர்வுகளையும் வர்த்தக சமூகமாகிய நாமும் மதிக்கின்றோம். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றபடபட வேண்டும் என்பதும் எமது அவா.

இருப்பினும் வவுனியா மற்றும் கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் எதிர்வரும் 27ம் திகதி பூரண கதவடைப்பு நடைபெறும் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால் வவுனியா வர்த்தக சங்கம் அப்படியான எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களோ அல்லது அவர்களுடன் தொடர்பு பட்டவர்களோ இதுவரை எம்முடன் போராட்டம் குறித்தோ அல்லது பூரண கதவடைப்பு குறித்தோ எந்தவித பேச்சுக்களும் செய்யவில்லை.

அதேபோல் எமது வர்த்தச சங்கமும் இது தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை. ஆகவே, வவுனியாவில் பூரண கதவடைப்பு என தற்போது வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்பதே எமது கருத்து எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.