அநுராதபுரம், தலாவ, பிதுன்கட பிரதேசத்தில் உள்ள வீடமைப்பு திட்டமொன்றின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு இடப்பட்டுள்ள எஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகளை கழற்றி திருடிச் செல்லும் கும்பலொன்றைச் சேர்ந்த மூவரை கையும்மெய்யுமாக பிடித்த பிரதேசவாசிகள் அவர்களை மரங்களில் கட்டி வைத்திருந்து பின்னர் விசாரணைகளுக்காக நேற்றுக்காலை தலாவ பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பிருந்து தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிதோகம, பிதுன்கட பிரதேசத்தில் அமைந்துள்ள சந்திராணிகம வீடமைப்பு திட்ட வீடுகள் சிலவற்றின் கூரைத்தகடுகள் திருடப்படுகின்றமை தொடர்பில் பிரதேசவாசிகள் அவதானம் செலுத்தியிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீடொன்றிலிருந்த 26 எஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகளை சந்தேகநபர்கள் திருடிச்செல்ல முயற்சித்த போது அவர்களை சுற்றிவளைத்து பிடிப்பதற்காக பிரதேசவாசிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
மேற்படி வீட்டிலிருந்து தகடுகளை ஏற்றிச்சென்ற லொறியின் டயர்களின் தடத்தினை பின்தொடர்ந்து சென்ற பிரதேசவாசிகள், குறித்த லொறி அப்பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு முன்பாக தரித்திருந்து புறப்பட்டு சென்றுள்ளதனை ஊகித்துக்கொண்டு அவ்வீட்டாரிடம், எவரேனும் லொறியில் வந்தனரா என வினவியுள்ளனர்.
அதன்போது, இளைஞர்கள் நால்வரும் வயோதிபரொருவர் வந்ததாகவும் அவர்களுடைய மோட்டார் சைக்கிளை தமது வீட்டுக்கு முன்பாக விட்டுச் சென்றுள்ளதுடன் அதனை பின்னர் வந்து எடுத்துச் செல்வதாகவும் அவர்கள் கூறிச் சென்றதாக அவ்வீட்டார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய பிதுன்கட கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூரைத்தகடுகளை திருடிய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மறைவான பகுதிகளில் பதுங்கியிருந்த நிலையில் சந்தேகநபர்கள் மூவர் தாம்விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்வதற்காக வந்திருந்த போது பதுங்கியிருந்த இளைஞர்கள் அவர்களை சுற்றிவளைத்து வீதியோரத்திலிருந்த மின்கம்பமொன்றில் கட்டிவைத்து தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதற்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களான 25 வயது இளைஞர்கள் இருவரையும் 55 வயதான நபரொருவரையும் கைது செய்ததுடன் சந்தேக நபர்களது மோட்டார்சைக்கிள்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஜயசிறிபுரவிலுள்ள வீடொன்றிலிருந்து, களவாடப்பட்ட கூரைத்தகடுகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.