நாடாளுமன்றத்தை விளையாட்டாக மாற்ற வேண்டாம் : அர்ச்சுனாவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!!

59

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று (23.07) கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று (23) கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, நிலையியல் கட்டளைகள் தொடர்பான கேள்வியை எழுப்ப முற்பட்ட அர்ச்சுனா இராமநாதன், கேள்வியை முன்வைப்பதற்கு முன்னரே அதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகரிடம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், நாடாளுமன்ற நடவடிக்கைகளை விளையாட்டுத்தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்ததுடன், நாடாளுமன்றத்தில் பொறுப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தினார்.

சபாநாயகரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்புத் தெரிவித்தார்.

நிலையியல் கட்டளைகளின்படி எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தகாத வார்த்தைகளால் குறிப்பிட முடியாது என சுட்டிக்காட்டிய அவர்,

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துள்ளவர் நிலையியல் கட்டளைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும், உறுப்பினர்களுக்கு கேள்விகளை எழுப்புவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் நிலையியல் கட்டளைகளுக்கு அமைய செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் இவ்வாறான முறையில் நேரத்தை வீணடிக்கும் செயற்பாடுகளை எவரும் மேற்கொண்டதில்லை என தெரிவித்தார்.

அத்துடன், அர்ச்சுனா இராமநாதனின் செயற்பாடுகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், அவரது செயற்பாடுகள் தொடர்பில் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட அவருடன் அருகில் அமர முடியாது எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் அவரால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றைக்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், தனிப்பட்ட முறையில் சபாநாயகரை இலக்காகக் கொண்டு இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தினால் நாடாளுமன்றத்தில் சில நிமிடங்கள் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், அமர்வு பரபரப்பாக அமைந்தது.