நாளை வட பகுதிக்கான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!!

431

வட மாகாணத்தில் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி நாளை இடம்பெறவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வட மாகாணத்திற்கான பேரூந்து சேவைகள் இடம்பெறாது என வடக்கு மாகாண இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ரி.இராஜேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை அரசு வெளிப்படுத்தக்கோரியும் நாளைய தினம் வடக்கு கிழக்கில் கதவடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சேவையில் ஈடுபடுவதை தவிர்க்கவுள்ளனர்.

எனவே வட மாகாணத்தில் அனைத்து பேரூந்து சேவைகளும் நிறுத்தப்படவுள்ளதுடன், தென் பகுதியில் இருந்து வரும் பேரூந்துகளும் வவுனியாவுடன் மட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே பயணிகளுக்கு இதனால் ஏற்படும் அசௌகரியத்திற்காக வருந்துவதுடன் எமது மக்களின் சாத்வீக போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளமையை கருத்தில் கொண்டு இந் நடைமுறையை கைக்கொள்வதாகவும் தெரிவித்தார்.