வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் வீதியை மறித்து போராட்டம் : பொலிசார் குவிப்பு!!

389

 
வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்கு ஆதரவாக இன்று(27.04.2017) பூரண ஹர்த்தால் இடம்பெற்று வருகின்றது.

வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பொது அமைப்புக்களின் ஆதரவுடன் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் கடைகள் அடைக்கப்பட்டு தனியார் மற்றும் அரச போக்குவரத்தும் இடம்பெறாதநிலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தளவில் காணப்படுகின்றது.

இந்நிலையில் இன்று காலை 8.15 மணியளவில் காணாமல் போனோரின் உறவினர்கள் தபால் நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்னாலும் A9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

இன் நிலையில் வவுனியாவில் பெருமளவிலான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் நீதிமன்ற அனுமதியுடன் இவர்களை கைதுசெய்யமுடியும் என எச்சரித்துள்ளனர்.