வீட்டாருடன் கோபித்துக்கொண்டு கொழும்புக்கு தனித்து வந்த சிறுவன்!!!

219

வீட்டாருடன் கோபித்து கொண்டு பேருந்தில் ஏறி கொழும்புக்கு வந்த சிறுவன் ஒருவர் பொலிஸாரினால் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை பகுதியில் அனாதரவாக காணப்பட்ட நிலையில் நேற்று (28.04) பொலிஸாரினால் 11 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

மஹியங்கனை, மாபாகடவெவ கேசெல்பொத்த யாய 11 மகா வித்தியாலத்தில் பயிலும் டி.எம். சஜித் விக்ரமசிங்க என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு கொழும்புக்கு வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சிறுவனின் தாய் கூலி வேலைக்கு சென்றுள்ளதுடன் சிறுவன் பாடசாலை முடிந்து பாட்டனாரின் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 26ஆம் திகதி மாலை சிறுவன் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாவுடன் காணாமல் போயுள்ளதாக சிறுவனின் தாய் மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, வீட்டில் இருந்து வெளியேறிய சிறுவன் மஹியங்கனை நகரில் செல்போன் கடையொன்றில் 6 ஆயிரத்து 990 ரூபாவுக்கு தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்துகொண்டு பேருந்து ஒன்றில் ஏறி கொழும்புக்கு புறப்பட்டு வந்துள்ளார்.

இவ்வாறு கொழும்பு வந்த சிறுவன் கோட்டை பகுதியில் அனாதரவான நிலையில் இருந்த போதே கோட்டை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.