ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி!!

844

 
திம்புள்ள பத்ததனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சவுத் மடக்கும்புர ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(01) மதியம் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். திம்புள்ள மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான தியாகராஜா வினோதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தனது 3 நண்பர்களுடன் குளிக்கச் சென்றிருந்த போது சுழியொன்றில் அகப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இளைஞரை நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் அது பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இன்று காலை பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தி இளைஞனின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதேவேளை, மரண விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.