வவுனியா புதுக்குளம் பாடசாலை அதிபரைப்பற்றி வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

315

 
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் பாடசாலை ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் அவதூறு ஏற்படுத்துமுகமாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருப்பதாக கூறி இன்று (03.05.2017) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் மாணவர்களின் பெற்றோர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்றிருந்ததுடன் பாடசாலையின் முன்னால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சுமார் 1 மணிநேரம் வீதி போக்குவரத்தும் பாதிப்படைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கிராம மாணவர்களின் கல்வியை அழிக்காதே, எங்கள் பாடசாலை சிறந்த பாடசாலை என நிரூபிக்க வேண்டுமா உனக்கு, வன்னி என்ற சொல்லின் பெருமை தெரியுமா உனக்கு, வன்னி மக்களிடம் பரிதாபப்பட நீ யார் போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்திருந்த வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.