வவுனியா செட்டிக்குளம் பாடசாலையின் அதிபருக்கு எதிரான போராட்டம் முடிவிற்கு வந்தது!!

1263

 
வவுனியா செட்டிக்குளம் படசாலையின் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் போன்றோர் இணைந்து கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்தனர்.

இந்நிலையில் நான்காவது நாளாக நேற்று(03.05) உணவு தவிர்ப்பு போராட்டம் காலை 8 மணியளவில் 6 பேர் கொண்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்ட இடத்திற்கு வருகைத் தந்த மேலதிக கல்விப்பணிப்பாளர், மாகாணக் கல்விப்பணிப்பாளர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் என அனைவரும் பாடசாலையின் நிலைமைகளை ஆராய்ந்ததுடன் பெற்றோருடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

இதே வேளை குறித்த அதிபரை தற்காலிகமாக வவுனியா தெற்கு வலயத்திற்கு இடம்மாற்றம் செய்து அவர் குற்றமற்றவர் என விசாரணைகளிலிருந்து அவரை விடுவித்து அதன் பின்னர் எமது பாடசாலைக்கு மாற்றுமாறு தெரிவித்திருந்தனர்.

மேலும் அதுவரையில் எமது பாடசாலையினை உப அதிபரின் தலைமையில் இயங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து சாதகமான முடிவிற்கு வந்த அதிகாரிகள் பாடசாலையினை தற்காலிகமாக உப அதிபரின் தலைமையில் இயங்க அனுமதித்தனர். அத்தோடு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் தமது போராட்டத்தினை இதன் பின்னர் கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.