வவுனியா பேரூந்து நிலையத்தில் மன்னார் சாலை பேரூந்தின் அசமந்தப்போக்கு : பயணிகள் சிரமம்!!

563

மன்னார் சாலைக்கு சொந்தமான இ.போ.ச சபையின் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர்களின் அசமந்தப்போக்கினால் இன்று (04.05.2017) பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து முருங்கன் ஊடாக முத்தரிப்பு பிரதேசத்திற்கான சேவை யுத்த காலத்திலும் இடம்பெற்று வந்தது. அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப் பிரதேசம் இரானுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த சமயத்தில் வவுனியா – முத்தரிப்பு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

நேற்றைய தினம் ( 03.05.2017) மீண்டும் வவுனியா – முத்தரிப்பு சேவை ஆரம்பமானது. இன்று (04.05.2017) மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மன்னார் சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேரூந்து மாலை 5 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தினை வந்தடைந்தது. மாலை 5.30 மணிக்கு மன்னார் நோக்கி புறப்பட வேண்டிய பேரூந்து பயணிகள் எவரையும் ஏற்றாது மன்னார் நோக்கி பயணித்தது.

இதனால் வேலைக்கு சென்று வீடு திரும்ப முடியாது பேரூந்து நிலையத்தில் மக்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா பேரூந்து நிலையத்தின் நேரக்கணிப்பாளரிடம் தொடர்பு கொண்ட போது,

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க எனக்கு அனுமதி இல்லை எனவும் இன்று மாலை 5.30 மணிக்கு வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பேரூந்து செல்லாது எனவும் தெரிவித்தார்.​

மன்னார் சாலை முகாமையாளரே இது உங்களின் கவனத்திற்கு.