கம்பளை நகரில் இரண்டரை வயது குழந்தையுடன் இளைஞர் ஒருவரும் கடத்தப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொஹமட் சல்மான் என்ற இரண்டரை வயது குழந்தையும் பதுளையிலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு வந்திருந்த குறித்த குழந்தையின் உறவினரான மொஹமட் அஸாம் என்ற 23 வயது இளைஞருமே கடத்தப்பட்டுள்ளனர்.
சம்பவதினமான புதன் கிழமை 2.30 மணியளவில் கம்பளை கங்கவட்ட வீதியில் அமைந்துள்ள கடத்தப்பட்ட குழந்தையின் தந்தையின் வர்த்தக நிலையத்துக்கு சுமார் 50 யார் தூரத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டிலிருந்து, குறித்த இளைஞன் குழந்தையையும் தூக்கிக்கொண்டு பகல் உணவை எடுத்து வந்த போதே இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சம்பவம் நடைபெற்ற பின்னர் மதியம் 3.30 மணியளவில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் தொலைபேசியூடாக குறித்த குழந்தையின் தந்தையின் தொலைபேசியுடன் தொடர்பு கொண்ட கடத்தல் காரர்கள் குறித்த இருவரும் பத்திரமாக இருப்பதாகவும் தாங்கள் மாலை 6 மணியளவில் மீண்டும் தொடர்பு கொள்வதாகவும் கூறி தொலைபேசியைத் துண்டித்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை கடத்தல் காரர்கள் கூறியதைப்போன்று, மீண்டும் தொடர்பு கொள்ளாமையையடுத்து இது குறித்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த குழந்தையையும் சிறுவனையும் விடுவிப்பதற்கு 30 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.