இந்தியாவில் நடைபெறவுள்ள உலக சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்குமான 8ஆவது சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 28 ஜூடோ வீர, வீராங்கனைகள் பங்கு பற்றவுள்ளனர்.
இதனை முன்னிட்டு கம்பளையில் நடத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான திறன்காண் போட்டிகளின் மூலம் 56 ஜூடோ வீர, வீராங்கனைகள் முன்னோடி குழாமுக்கு தெரிவு செயப்பட்டுள்ளதாக இலங்கை ஜூடோ சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
முன்னோடி குழாமுக்கு தெரிவாகியுள்ளவர்களில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி ஆச்சிரம சைவ சிறுவர் இல்லத்தைச் சேர்ந்தவரும் இந்து கல்லூரியில் கற்பவருமான ரசீந்திரன் சுஜீபாவும் அடங்கு கின்றார். இவர் 16 வயதுக்குபட்டவர்களுக்கான 40-44 கிலோ பிரிவிலேயே தெரிவாகியுள்ளார்.
இந்தக் குழாமில் இடம்பெறும் 56 வீர, வீராங்கனைகளில் இறுதி 28 வீரஇ வீராங்கனைகள் தெரிவு செயப்பட்டு லக்னோவில் அடுத்த மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இதற்கான இறுதித் தேர்வுப் போட்டிகள் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களில் நடைபெறவுள்ளன. கிளிநொச்சி மகாதேவா ஆசிரம சைவ சிறுவர் இல்ல ஜூடோ வீராங்கனைகளுக்கு பி. டபிள்யூ. ஜயவர்தன பயிற்சி அளித்து வருகின்றார்.
இந்த வீராங்கனைகள் இவ் வருடமே ஜூடோ விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்ததாகவும் அவர்களுக்கு தீவிர பயிற்சிகளைத் தொடர்ந்து வழங்கினால் அவர்களால் பதக்கங்கள் வெல்லக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ் வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவுக்கான ஜூடோ போட்டிகளிலும் தேசிய விளையாட்டு விழாவுக்கான ஜூடோ போட்டிகளிலும் சுஜீபாவின் மூத்த சகோதரி ரசீந்திரன் தமிழ்மகள் பதக்கங்கள் வென்றதையும் அவர் நினைவுகூறத் தவறவில்லை.
வட மாகாணம் சார்பாக ஜூடோவில் முதலாவது பதக்கதை வென்று கொடுத்தவர் தமிழ்மகள் ஆவார். வருங்காலத்தில் இன்னும் பல பதக்கங்களை மகாதேவா ஆசிரம சைவ சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மூலம் வட மாகாணத்திற்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் பயிற்சிகளை அளிக்கவுள்ளதாக பயிற்றுநர் ஜயவர்தன கூறினார்.