பறக்கும் விமானத்தில் இலங்கை பயணிகள் அட்டகாசம் : மோதலாக வெடித்த தகராறு!!

290

பறந்து கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பயணிகள் இருவர் கடுமையாக மோதிக் கொண்டதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு இறுதியில் மோதலாக மாறியுள்ளதென விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த 45 மற்றும் 35 வயதுடைய பயணிகள் இருவரே இவ்வாறு மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் தங்கொட்டுவ மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் ஜப்பானில் பல வருடங்கள் சேவை செய்துவிட்டு நாடு திரும்பியவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நரீடா விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யு.எல்.455 என்ற விமானத்தில் 100க்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ள நிலையில் அவர்கள் நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளனர்.

விமானத்தில் பலர் உறக்கத்தில் இருந்த வேளையில், இலங்கை பயணி ஒருவர் அதிகமான மது அருந்திவிட்டு அருகில் இருந்த பெண்ணிடம் தவறான முறையில் நடந்துக் கொண்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

விமான பயணிகளுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் நடத்துக் கொண்டிருந்த இந்த பயணி தொடர்பில் மற்றுமொருவர் அதனை தடுக்க முயன்றுள்ளார். இதன்போது இருவருக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்த நிலையில், விமான நிலைய ஊழியர்களினால் சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த இரண்டு பயணிகளையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.