கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கங்க வட்ட வீதி பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த இரண்டரை வயது குழந்தையை கடத்தியமை, சட்டபூர்வமான பாதுகாப்பிலிருந்து குழந்தையை பிரித்தமை, தடுத்து வைத்தமை மற்றும் கப்பம் கோரியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தையுடன் மாயமான பின்னர் கடத்தலின் பிரதான சூத்திரதாரி எனக் கண்டறியப்பட்ட மாமா உறவு முறை இளைஞர் முஹம்மத் அசாம் மற்றும் குழந்தையை தடுப்பில் வைத்திருந்த இரு பெண்களையுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க கம்பளை மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கடத்தலை, குழந்தையை இறுதியாக அழைத்துச் சென்ற மாமா முறை இளைஞரே நடத்தியுள்ளதாக கூறும் பொலிஸார், பிறிதொரு குழுவும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளதுடன் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபரின் விசேட உத்தரவுக்கமைய மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, கண்டி – மாத்தளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்க ஆகியோரின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தனிப் பிரிவுகள் இரண்டின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான நடவடிக்கைகளை வழி நடத்தும் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ். மெண்டிஸிடம் வழங்கப்பட்டுள்ளதுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஞானசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ்விரு குழுக்களும் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
அதன்படி ஒரு குழு கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ். கிரிசாந்தவின் கீழும், மற்றைய குழு கம்பளை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழும் அமைக்கப்பட்டுள்ளன.
.