வவுனியாவில் ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் போராட்டம்!!

353

 
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 அன்று பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தினை ஆரம்பித்து இன்று (09.05.2017) ஆறாவது நாளாகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடமையாற்றி பல உயிர்களை காப்பாற்றிய எங்களுக்கு நியமனம் இல்லையா? , நீண்ட காலமாக சேவை ஆற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வெயில் மழை பாராமல் ஊதியம் இல்லாமல் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்திய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? என பல்வேறு பதாதைகளை தாங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.