வவுனியாவில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!!

308

புதுக்குடியிருப்பு தொழிற்சாலையொன்றில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை ஊடகவியலாளர்களின் உதவியுடன் வவுனியா பொலிஸார் இன்று(10) மடக்கிப்பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வந்த நபரொருவர் தொழிற்சாலையில் எவரும் இல்லாத நிலையில் அங்கிருந்த அலுவலத்தில் பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை உடைத்து திருடியுள்ளார்.

இந்த நிலையில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்த குறித்த நபர் பணம் திருடும் வீடியோ சில இணையத்தளங்களில் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து குறித்த சந்தேக நபர் வவுனியா நகரப்பகுதியில் நடமாடுவதை அவதானித்த ஊடகவியலாளர்கள் சிலர் குறித்த தொழிற்சாலையின் உரிமையாளருடன் தொடர்பு கொண்டு சந்தேக நபர் தொடர்பான மேலதிக விபரங்களை கோரியிருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் குறித்த நபரே என அறிந்துகொண்ட பின்னர் வவுனியா பொலிஸாருக்கு ஊடகவியலாளர்கள் தகவல் வழங்கியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த பொலிஸார் ஊடகவியலாளர்களின் உதவியுடன் சந்தேக நபரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

இந் நிலையில் வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் விடுதியொன்றில் மறைந்திருந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

-தமிழ்வின்-