வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் தினம் அனுஷ்டிப்பு!!

1023

 
சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று (12.05.2017) காலை 11 மணியளவில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் தலைமையில் சர்வதேச தாதியர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா, பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன், பிரதிபணிப்பாளர் வைத்திய கலாநிதி தமிழினி, சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சுரேந்திரன், தாதிய பரிபாலகர் திரு.பாலநாதன், திருமதி.குமாரசிங்கம், வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் அனாஸ், தாதிய பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள், தாதிய கல்லூரி மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வில் புளோரன்ஸ் நைற்றிங்கேல் அவர்களின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தாதிய உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.

தாதிய கல்லூரி மாணவிகளின் பரத நடன நிகழ்வு, கண்டியன் நடனம், தாதிய உத்தியோகத்தரின் பாடல் , தாதிய உத்தியோகத்தர்களின் நகைச்சுவை நாடகம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.