இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண்ணொருவர் தனது வீட்டில் கட்டப்பட்ட கழிப்பறைகளை காணவில்லை அவற்றை கண்டுபிடித்து தர வேண்டும் என பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமர்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 70 வயது வயோதிப பெண் பெலா பாய் பாட்டீல். இவரது மகள் சந்தா (40). இருவரும் வறுமையில் வாழ்க்கையை நடத்துபவர்கள்.
‘சுவச் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் தங்கள் வீட்டில் கழிப்பறை கட்டித்தர கோரி, 2015 –-16ஆம் ஆண்டில் பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தனர்.
ஆனால், இதுவரை கழிப்பறைகள் கட்டப்படவில்லை. இது குறித்து பஞ்சாயத்தில் கேட்ட போது, ‘கழிப்பறைகள் கட்டப்பட்டு விட்டன. அதற்கான செலவு தொகையும் அளிக்கப்பட்டு விட்டது’ என தெரிவித்துள்ளனர்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்ட போது, கழிப்பறைகள் கட்டப்பட்டு விட்டதாக ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இரண்டு பெண்களும் கழிப்பறைகளை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் பிலாஸ்பூர் மாவட்ட பொலிஸில் முறைப்பாடு செய்து ள்ளனர்.