அக்காவின் திருமணத்தன்று தங்கை மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!!

260

தமிழக மாவட்டம் தஞ்சையில் இளம்பெண்ணொருவர் தனது சகோதரியின் திருமணத்தன்று உயிரிழந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் (23). இவரும் உறவினர் மகன் மார்ட்டின்ராஜ் என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

குடும்பத்தின் மூன்றாவது மகளான ஜெனிஃபர், தனது அக்காவின் திருமணத்திற்கு முன்பே காதலரை கரம்பிடித்துள்ளார். அப்போது மார்ட்டின்ராஜ் வீட்டில் சீர்வரிசை எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

ஆனாலும், இரண்டாவது மகளின் திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசை செய்வதாக ஜெனிபரின் பெற்றோர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெனிஃபரின் சகோதரிக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்துள்ளது. அங்கு ஜெனிஃபரின் மாமியாரும், நாத்தனாரும் உனக்கு ஏன் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என்று சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அன்றிரவு தனது பெற்றோரிடம் செல்போனில் பேசிய ஜெனிஃபர், சீர்வரிசை செய்யாததை குறிப்பிட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், ஜெனிஃபரின் சகோதரர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஜெனிஃபர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் தங்கள் மகளின் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும், அவரின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஜெனிஃபரின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பொலிஸார், உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை நடத்த அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.