வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!!

828

 
வவுனியா நெளுக்குளத்தில் இன்று (15.05.2017) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நெளுக்குளம், புதையல்பிட்டியில் வசித்துவரும் ஆறு மாத கைக்குழந்தையின் தாயான சுதன் வாணி (வயது 24) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் இவரது சொந்த இடமான கிளிநொச்சிக்கு அவரது வீட்டுக்கு காலை சென்று மீண்டும் மாலை வீடு திரும்பியுள்ளார். இன்று காலை எழுந்து வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து மாமனாருக்கு காலை உணவைத் தயார் செய்து அவருக்கு வழங்கியுள்ளார். மாமனார் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

கணவன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று வீட்டுக்கு திரும்பி வரும் போது ஆறு மாதக் கைக்குழந்தை தொட்டிலில் இருந்து அழுதுகொண்டிருந்துள்ளது. குறித்த பெண்ணின் கணவர் குழந்தையை தூக்கி கொண்டு தாயை தேடிய போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவரின் மரணத்திற்கான காரணம் என்ன என நெளுக்குள பொலிஸார் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருடன் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.