வவுனியா இளைஞர்கள் குத்துச் சண்டையில் 7 தங்கப்பதக்கங்களைப் பெற்று சாதனை!!

780

 
வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் குத்துச் சண்டையில் 7 தங்கப்பதக்கங்களையும் 2 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அகில இலங்கை ரீதியில் கடந்த 12 மற்றும் 13.05.2017 திகதிகளில் இரண்டு நாட்கள் கண்டியில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் 9 பதக்கங்களை வெற்றி பெற்ற மாணவர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இக் குத்துச்சண்டைப் போட்டியில் இரண்டு பெண் வீராங்களைகள் மற்றும் 7 வீரர்கள் கலந்துகொண்டு வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பி.கரிஸ்ணா, சி.சிறிதர்சன், ம.சுஜித், எம்,சப்னா, த.தர்சிகா விணோசினி,ப.சுஜிவலக்மால் ஆகியோர் தங்கப் பதக்கத்தையும், எஸ்.சங்கீதன், த.டினேஸ் வெள்ளிப்பதக்கங்களையும் தனதாக்கியுள்ளனர்.

இந்தியாவில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள குத்துச்சண்டை மாணவர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வவுனியா நகரசபை மன்டபத்தில் பயிற்சியில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இவர்களில் 5 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தின் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளராகிய எஸ்.நந்தகுமார் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்..

கடந்த காலங்களில் வடமாகாணத்தை பிரநிதித்துவப்படுத்தி வவுனியாவிலிருந்து குத்துச்சண்டை மாணவர்களை தயார்படுத்தி வெற்றிகளை பெற்று வந்துள்ளோம். எமது மாணவர்கள் குறைந்த வளங்களுடன் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்று வருகிறார்கள்.

இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு அறிவித்து வருகிறேன் எமது மாணவர்கள் மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள், அவர்களுக்கான சத்துணவு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டால் எமது மாணவர்கள் மென்மேலும் சாதனை படைப்பார்கள் என தெரிவித்தார்.