அகில இலங்கை பாடசாலைகள் மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் முதல் நாளான நேற்று வட மாகாணம் மூன்று பதக்கங்களை பெற்றுள்ளது.
கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளன. முதல் நாளான நேற்று ஏழு இறுதிப் போட்டிகள் நடைபெற்றதுடன் இதில் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண வீராங்கனைகள் பிரகாசித்தனர்.
போட்டியில் 2.60 மீற்றர் உயரத்தை பதிவுசெய்து யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரியின் டி.தன்சிகா தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இதேபோட்டியில் 2.50 மீற்றர் உயரத்தை பதிவுசெய்த அளவெட்டி அருனோதயா கல்லூரியின் கே.டிலக்சனா வெண்கலப்பதக்கத்தை வெற்றிபெற்றார்.
21 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான குண்டெரிதல் போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷனரி கல்லூரியின் ஆர்.நிமலேந்திரா தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். போட்டியில் அவர் 13.60 மீற்றரை பதிவுசெய்தார்.