தானாகவே சுத்தம் செய்துகொள்ளும் புதிய வகை துணி அறிமுகம்!!

369

cloth

எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. துவைக்கவே வேண்டாம். தானாகவே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது. குடும்பஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் துணி துவைப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலைகளில் ஒன்றாக உள்ளது.

கிராமங்களில் பரவாயில்லை. ஆறு, குளத்தில் துவைத்து விடுவார்கள். நகரத்திலோ சலவை இயந்திரமே கதி.
இது போன்ற புலம்பல் ஆசாமிகளுக்காக தன்னாலேயே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது. ரொம்பவும் சந்தோஷப்படாதீர்கள் இந்த துணி வந்துள்ளது இங்கில்லை, அமெரிக்காவில். அமெரிக்க இராணுவத்தில்.

யு.எஸ். சோல்ஜர் ரிசர்ச் டெலவப்மெண்ட் இன்ஜினியரிங் சென்டர் என்ற ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பணியாற்றும் மூத்த விஞ்ஞானி தாவுரங் என்பவர் புதிய வகை துணி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 5 சோடி ஆடைகள் வழங்கப்படுகிறது. காடு, மலை, மேடு என்று பணியாற்றும் இராணுவ வீரர்கள் தங்கள் ஆடைகளை பணியிடங்களில் துவைத்துக் கொள்ள வசதிகள் இருப்பதில்லை.

இதனால் பல வீரர்கள் அழுக்குத் துணியோடு இருக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. இதையடுத்து இராணுவ வீரர்களுக்கு துவைக்க வேண்டிய அவசியம் இல்லாத துணியை கண்டறிந்தால் என்ன என்ற சிந்தனை தாவுரங்குக்கு ஏற்பட்டது. அதன் வெளிப்பாடுதான் துவைக்காத துணி.

இவர் கண்டறிந்துள்ள இந்த புதிய வகை துணியில் ஓம்னி போபிக் கோட்டிங் என்ற வகை இரசாயன பூச்சு கலந்து நெய்யப்பட்டுள்ளது. இந்த பூச்சு பூசப்பட்ட துணியில் தயாரிக்கப்பட்ட இராணுவ சீருடையை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தினாலும் அழுக்கு ஆகாது.

மேலும் கிரீஸ், சேறு போன்ற கறைகள் பட்டாலும் சீருடையை கழட்டி உதறினால் அதுவும் போய்விடும். அதே போல உடம்பில் எப்படிப்பட்ட துர்நாற்றம் இருந்தாலும் அதுவும் சீருடையில் காட்டாது. சீருடை நறுமணத்தோடு இருக்கும். புதிய வகை துணி குறித்து தாவுரங் கூறியதாவது..

போர்க் கள முனையில் இருக்கும் எங்கள் வீரர்களுக்கு முகாம் அலுவலகங்களில் துணி துவைப்பதற்காக இயந்திர வசதிகள் உள்ளன. ஆனால் எல்லைகளில் பணியாற்றும் வீரர்கள் துணி துவைப்பதற்காக வர இயலாது.

இராணுவப்பணி என்பது மிகவும் கடுமையானது. அவர்கள் இங்கு வந்து செல்வதை தவிர்க்கும் வகையில் புதிய ரக துணி கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள இரசாயன கலவையால் உடல் நலத்துக்கு எவ்வித பிரச்சினையும் வராது. புதிய ரக துணியில் தைக்கப்பட்ட சீருடைகள் கான்சாஸ் மாகாணம் போர்ட் ரெய்லி என்ற பணியிடத்தில் உள்ள வீரர்களுக்கு சோதனை முறையில் கொடுத்து அணிவித்தோம்.

எவ்வித பிரச்சினையும் இல்லை. இந்த துணியானது தனக்குத்தானே சுத்தம் செய்து கொள்ளும் வகையில் அதாவது கழட்டி உதறினால் துவைத்தது போன்ற புத்துணர்வோடு சீருடை காணப்படும் என்றார்.