லெப்டொப் கணினியை மார்பின் மீது வைத்துக் கொண்டு கிரிக்கெட் போட்டியொன்றை பார்த்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் மேற்கொண்ட ஆய்வில் கணனியிலிருந்து வெளியேறிய இருவிதமான வாயுக்களை சுவாசித்ததால் மரணம் சம்பவித்துள்ளதாக கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம். அஷ்ரப் ரூமி தெரிவித்துள்ளார்.
லெப்டொப் கணனியை மார்பின் மீது வைத்துக் கொண்டிருந்த கொழும்பு 14 கிராண்ட்பாஸ் வீதியைச் சேர்ந்த 17 வயதான மாணவனே உயிரிழந்தார்.
இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மாணவன் உயிரிழந்த சுமார் பத்து மாதங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மாணவனின் மரண விசாரணை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஓகல் சங்கரால் மேற்கொள்ளப்பட்டதுடன், மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமற் போனதால் உடற்பாகங்கள் இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்தப் பகுப்பாய்வு அறிக்கையின்படி Diazepam மற்றும் imperamine என்ற இரு விஷ வாயுக்களை சுவாசித்து சுவாசக் குழாய் வழியாக விஷம் உடலில் கலந்ததால் இம்மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.