வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இயங்கிவரும் சிறு வியாபாரிகள் சந்தையை புனரமைக்க வவுனியா நகரசபையின் செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இப்புனரமைப்பு தொடர்பாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சிறுவியாபாரிகள் சங்கம் மற்றும் நகரசபை செயலாளர் ஆர் தயாபரன் தலைமையில் நகரசபையின் மண்டபத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த நகரசபைச் செயலாளர்..
வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்திற்கு இருசக்கர தரிப்பிடமொன்று அவசியம் என வர்த்தக சங்கத்தலைவர் கோரிக்கை விடுத்ததையடுத்து மாவட்ட அரசாங்க அதிபர் இரு சக்கர தரிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நகரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியமைக்கு அமைவாக தற்சமயம் தற்காலிகமாக இயங்கிவரும் சிறுவியாபாரிகள் சந்தையை வேறு இடத்திற்கு இடமாற்றி அவ்விடத்தில் இருசக்கர வாகன தரிப்பிடம் அமைக்கவிருப்பதாக தெரிவித்த நிலையில் சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் யூ.அயுப்கான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் சிறு வியாபாரிகள் அவ்விடத்தை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதாகவும் இருசக்கர வாகன தரிப்பிடம் அமைப்பதற்கு தாங்கள் எதிர்க்கவில்லை அவ்விடத்தை சுற்றி கடைகளை அமைத்து நடுவில் வாகன தரிப்பிடத்தை அமைக்குமாறும் தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நகரசபை நிர்வாகம் எதிர்வரும் 15.07.2017 சிறுவியாபாரிகள் சந்தையை மறு சீரமைக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளநிலையில் தற்சமயம் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் 33 பதிவுசெய்யப்பட்ட வியாபாரிகளுக்கு மாத்திரமே அவ்விடத்தில் கடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






