மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரி சுகாதார அமைச்சு அமைந்துள்ள வளாகத்திற்கு முன்பாக கடந்த (21.06.2017) மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்களை பொலிஸார் கலைக்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 90 பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் (22.06.2017) தொடக்கம் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் நேற்று முன்தினம் (22.06.2017) தொடக்கம் ஆரம்பித்த காலவரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் (24.06.2017) மூன்றாவது நாளாக இடம்பெறுகின்றது.
இதன்காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகள் இயங்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

















