வவுனியாவில் 23 வது சர்வதேச யோகா தினம் இன்று (24.06.2017) வவுனியா நகரசபை மைதானத்தில் இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
வடமாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் இணை அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கலந்துகொண்டிருந்தார்.
இந்திய உயர் ஸ்தானியர் காரியலாயத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களையடுத்து வவுனியாவில் சர்வதேச யோகா தினம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகர பாடசாலையிலுள்ள 1000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று இடம்பெற்ற சர்வதேச யோகா தினத்தில் பங்குபற்றியிருந்ததுடன் இந்திய தூதரக கலைக்கூட யோகாசன ஆசிரியரும் யாழ் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளருமாகிய எஸ்.சூரியகுமார் யோகாசன பயிற்சிகளை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் இறுதியில் யோகாசன சிறப்பு மலரும் (புத்தகம்) நிகழ்வில் கலந்துகொண்ட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களுக்கு இந்தியத் துணைத்தூதுவரால் வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணன், தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

































