வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது!!

268

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (25.06.2017) காலை 8 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மல்லாவி இராணுவ முகாமில் பணியாற்றி வரும் டினேஸ் குமார ( வயது 32 ) என்பவர் இன்று (25.06.2017) விடுமுறையினையடுத்து அவரது சொந்த ஊரான காலி மாவட்டத்திற்கு இ.போ.ச பேரூந்தில் சென்றுள்ளார்.

இதன் போது வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து 68 கிராம் 62 மில்லிகிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவை வைத்திருந்த குறித்த இராணுவ வீரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.