வவுனியா ஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நிதியம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவி!!

1093

 
வவுனியா ஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் இன்று(05.07.2017) மாலை 3.30 மணியளவில் பல்கலைக்கல்வியை மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் க.திலீபன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹண புஸ்பகுமாரவும், சிறப்பு விருந்தினராக உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் (கமநல அபிவிருத்தி திணைக்களம்) கலந்து கொண்டு ஓமந்தை கமநல அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக பல்கலை செல்லும் வசதியற்ற ஓமந்தை பகுதி விவசாயிகளின் பிள்ளைகள் 4 பேருக்கு முதற்கட்டமாக மாதாந்த உதவி புலமைப்பரிசில் வழங்கினர்.

ஓமந்தை கமநல பிரதேச விவசாயிகளின் பிள்ளைகளின் கல்வியினை அபிவிருத்தி செய்வதே கமநல கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் இச் செயற்றிட்டத்தினூடாக எதிர்காலத்தில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகை வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனுடன் இணைந்ததாக வசதியற்ற 7 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இன்றைய நிகழ்வில் நிதியத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர், கமநல சேவைகள் நிலையத்தின் உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.