இந்தியா- சீனா பிரச்சனை : எச்சரிக்கை விடுத்த சீனா!!

360

இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோகாலம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன.

அங்கு சீனாவுக்கும், பூடானுக்கும் இடையே எல்லைத்தகராறு நிலவி வருகிறது. பூடானுக்கு சீனாவுடன் தூதரக உறவு இல்லாததால், இந்தியாவின் ராணுவ பலத்தையே நம்பி இருக்கிறது.

பூடானை ஆக்கிரமிக்கும் வகையில், சீன ராணுவத்தினர் அப்பகுதியில் சாலை அமைத்து வருகிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு, அவர்கள் சிக்கிம் மாநிலத்துக்குள் புகுந்து, இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தனர்.

மேலும், இந்தியப் படைகளை திரும்பிச் செல்லுமாறு மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்களை சமாளிக்க கூடுதலாக இந்திய படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

இதனால், ஒரு மாத காலமாக அங்கு போர் அபாயம் நிலவி வருகிறது. இந்தியா தன்னுடைய படைகளை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது. பிரச்சனையை தீர்க்கும் பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது என சீனா கூறிவருகிறது.

இந்திய ராணுவம் எந்தஒரு நிபந்தனையுமின்றி வெளியேற வேண்டும், இந்தியா – சீனா இடையில் ஒரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை வேண்டும் என்றால் இதுதான் முன்நிபந்தனையாகும் என சீனா கூறிஉள்ளது.

இந்நிலையில் இந்தியாவிற்கு வரும் சீனர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்போவதாக சீன வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்தியாவிற்கு எதிராக தூதரக ரீதியிலான நடவடிக்கையில் இறங்கி உள்ள சீனா இந்நகர்வுக்கு வந்து உள்ளது. சீன வெளியுறவுத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், சீனாவின் நம்பிக்கையை பெறும் வகையில் இந்தியா படைகளை திரும்ப பெற வேண்டும். சீன பகுதியில் இந்திய ராணுவம் நிலைக்கொண்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் வெளியுறவுத்துறை விவகாரங்கள் துறை அலுவலகம், இந்தியா முழுவதும் சீனர்களுக்கு பயண எச்சரிக்கையை வழங்க பரிசீலனை செய்வதாக கூறிஉள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.