வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் தேவையில்லை!!(காணொளி)

616

 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றிமுறையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் (06.07) 132வது நாட்களை எட்டியுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

இலங்கை அரசாங்கத்திடம் எங்கள் பிள்ளைகள் தொடர்பான ஆதாரங்களை கொடுத்து கடந்த 132 நாட்களாக தொடர்ச்சியாக இரவு பகல் என்று பாராமல் பிள்ளைகளை தொலைத்த தாய்மார்களின் பங்களிப்புடன் நாங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் 2015 ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் அமைக்கப்படவுள்ளதாக அறிவித்த சர்வதேசம் இலங்கை அனுமதி அளிக்கவில்லை என்று காரணம் கூறி இன்று வரை தட்டிக்களித்துவந்துள்ளது.

07-2017 ஆம் மாதத்திற்கு பிறகு காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் அமைத்து இனி எத்தனைவருடங்களுக்கு பிறகு எமது பிள்ளைகளை விடுதலை செய்யப்போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

அத்துடன் பல போராட்டங்கள் ஊடாகவும் உறுதியான ஆதாரங்கள் ஊடாகவும் எங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை மழுங்கடிக்கவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் அமைப்பது தொடர்பான செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் எத்தனை அலுவலகங்களை அமைத்தாலும் எத்தனை வருடங்கள் ஆனாலும் போராட்டம் கைவிடப்பட முடியாது எங்கள் பிள்ளைகள் தொடர்பான சரியான தீர்வு வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தாய்மார்களை சந்தித்து கலந்துரையாடிய ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட முன்னாள் வேட்பாளர் எ.எஸ்.எம்.தாயுன் கருத்து தெரிவிக்கையில்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்காமல் இருப்பது கவலையளிப்பதுடன் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலும் உள்ள மக்களே அதிகமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யுத்தத்தில் இறந்தவர்கள் போக மற்றவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அவர்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் வைத்து புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தத்தின் காரணமாக காணாமல் ஆக்கப்படடவர்கள். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிடிக்கப்படடடவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு உதவி செய்து கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடைய மாகாணத்தில் புனர்வாழ்வளிப்பதன் ஊடாக அவர்களின் உறவுகள் பார்வையிட வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.