அன்பகத்தில் அடிக்கின்றார்கள், துன்புறுத்துகின்றார்கள், இங்கு என்னால் இருக்க முடியவில்லை என நான் அங்கு செல்லும் போதெல்லாம் என்னிடம் பேத்தி தெரிவிப்பார் என வவுனியா வேப்பங்குளம் அன்பகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் தாத்தா இ.சவரியாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்..
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியா வேப்பங்குளம் சிறுவர் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் றொக்சிகா எனது பேத்தியாவார்.
புளியங்குளத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தின் ஊடாக வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திற்கு எனது பேத்தியினை சேர்த்தனர். நான் எனது பேத்தியினை மாதாந்தம் சென்று பார்வையிட்டுவருகின்றேன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நான் சென்ற சமயத்தில் என்னால் இங்கு இருக்க முடியவில்லை, சின்னப் பிள்ளைகளின் உடைகளை துவைக்கச் சொல்கின்றார்கள், எனக்கு நிறைய வேலைகள், இந்த அன்பகத்தில் என்னால் இருக்க முடியாது என்னை வேறு அன்பத்திற்கு மாற்றி விடுங்கள், இவற்றை அம்மாவிடம் சொல்லவும் இல்லை என்றால் அம்மாவின் தொலைபேசி இலக்கத்தினை தாருங்கள் என்று கேட்டார். நான் அம்மாவின் தொலைபேசி இலக்கத்தினை வழங்கியுள்ளேன். ஆனால் அம்மாவிடம் அவர் கதைக்கவும் இல்லை.
எனது பேத்திக்கு இங்கு இருக்க விருப்பம் இல்லை, வேறு அன்பகத்திற்கு மாற்றித்தருமாறு அன்பக பொறுப்பாளரை சந்தித்து தெரிவித்தேன். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து எங்களிடம் வேறு அன்பகங்கள் உள்ளன இவற்றில் ஒன்றில் சேர்த்து விடுவதாக தெரிவித்தார். ஆனால் மாற்றவில்லை.
எனது பேத்தி தற்கொலை செய்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் எனக்கு மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது பேத்தியின் தலையினை தங்கியிருந்த அறை சுவற்றில் அடித்தது போன்று சடலம் இருந்தது. கயிறு முடிச்சே போடத்தெரியாத எனது பேத்தி எவ்வாறு தற்கொலை செய்து கொள்வார்?
எனது பேத்தியின் மரணத்திற்கு நீதியான தீர்வு வேண்டும். அன்பகப் பொறுப்பாளருக்கு சரியான தண்டணையினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.






