வவுனியாவிலிருந்து நேற்று (09.07.2017) மாலை 5.30 மணியளவில் செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் பல்கலைக்கழக மாணவிக்கும் பேரூந்து நடத்துனருக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரன்பாடு கைகலப்பாக மாறியதில் காயமடைந்த மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து பம்பைமடுவிற்கு பேருந்து கட்டணமாக 20 ரூபாவே அறவிடப்பட்டு வந்துள்ளது எனினும் குறித்த மாணவி 50 ரூபாவினைக்கொடுத்து மிகுதி 30 ரூபாவினைக் கேட்டுள்ளார். இதையடுத்து தனியார் பேருந்து நடத்துனர் 30 ரூபா பெற்றுக்கொண்டு 20 ரூபாவினைக் கொடுத்துள்ளார். இதையடுத்து குறித்த மாணவி 20 ரூபாவே பேருந்து கட்டணமாக அறவிடப்படுவது என்று தெரிவித்து ஏன் 30 ரூபா பெறப்படுகின்றது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து நடத்துனருக்கும் குறித்த பல்கலைக்கழக மாணவிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது . பேரூந்தினை விட்டு இறங்கிய பல்கலைகழக மாணவி சக பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தி தன்னை பேரூந்து நடத்துனர் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள் பேரூந்தினை பின்தொடர்ந்து கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பேரூந்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் சாதுரியமாக செயற்பட்ட பேருந்தின் சாரதி பேருந்தை பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், பொலிஸிலும் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச் சம்பவத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.










